வெள்ளி, 13 டிசம்பர், 2024

பழைய அகலில் தீபம் ஏற்றலாமா?

பழைய அகலில் தீபம் ஏற்றலாமா?



கார்த்திகை தீபத்தன்று பழைய அகல் நன்றாக இருக்கும் பட்சத்தில் அதை நன்றாக சுத்தம் செய்து கழுவி விட்டு, காய வைத்து, அதற்கு மஞ்சள், குங்குமம் வைத்து அந்த விளக்கை பயன்படுத்தி தீபம் ஏற்றலாம்.

 ஒவ்வொரு ஆண்டும் புதிதாக அகல் விளக்கு வாங்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது.

 ஒருவேளை நீங்கள் பயன்படுத்தும் பழைய அகல் மிகவும் கருப்பாகி, ஏதாவது ஒரு பாகம் சேதமடைந்து இருந்தால் அந்த அகலை பூஜை அறை குப்பைகளுடன் சேர்த்து விட்டு, புதிய அகல் வாங்கி பயன்படுத்தலாம்.

 அப்படி இல்லாமல் புது அகல் வாங்கி விளக்கேற்ற வேண்டும் என நினைப்பவர்கள், வழக்கமாக ஏற்றும் பழைய விளக்குகளுடன் ஒவ்வொரு ஆண்டும் ஒன்று அல்லது 2 புதிய அகல்களை வாங்கி வைத்து அவற்றையும் சேர்த்து ஏற்றலாம்.

ஸ்ரீரங்கத்தில் கார்த்திகைத் திருவிழா:

கார்த்திகை தீபம் ஸ்பெஷல் !

ஸ்ரீரங்கத்தில் கார்த்திகைத் திருவிழா: 



பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம் திருத்தலம், நூற்றியெட்டு வைணவத் திருத்தலங்களில் முதன்மையானது. இங்கு, கார்த்திகைத் திருவிழா மிகச்சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. கார்த்திகை பௌர்ணமி விழாவை "ஸ்ரீ பாஞ்சராத் தீபம்' என்று போற்றுவர். கார்த்திகை விழா அன்று ஸ்ரீ நம்பெருமாளுக்கு காலை ஒன்பது மணியளவில் சந்தன மண்டபத்தில் திருமஞ்சனம் நடைபெறும். மாலை உத்தம நம்பி சுவாமிகளின் இடை விளக்கு எடுத்தல் நிகழ்ச்சி நடைபெறும். இரவு 8.00 மணிக்குள் சக்கரத்தாழ்வார் சந்நிதிமுன் பெருமாள் எழுந்தருள்வார்.

அப்போது, கார்த்திகை கோபுர வாசல் பக்கம் கட்டப்பட்டிருக்கும் சொக்கப்பனையை பெருமாள் முன்நிலையில் ஏற்றுவார்கள். பெருமாள் அக்காட்சியை கண்டருள்வார். பிறகு, சந்தன மண்டபத்திற்கு எழுந்தருள்வார்.

அங்கே, அரையர்கள், திருமங்கையாழ்வார் பாசுரத்தைப் பாடுவார்கள். அதற்குப்பின் வரவிருக்கும் மார்கழி மாதத் திருநாளுக்காக நம்மாழ்வாருக்கு விவரமாக கடிதம் எழுதுவார்கள். இதனை, "ஸ்ரீ முகப்பட்டயம்' என்பர். நம்மாழ்வாருக்கு ஸ்ரீ முகப்பட்டயம் எழுதியருளும் நிகழ்ச்சி நிறைவு பெற்றதும் பக்தர்களுக்கு அருளாசி வழங்கிவிட்டு, பெருமாள் கோயிலுக்குச் செல்வார். 

பெருமாளை தரிசித்து, அவர் முன்னிலையில் சொக்கப்பனை ஏற்றும் நிகழ்ச்சியைத் தரிசித்தால் நம் முன் வினைப் பாவங்கள் நீங்கி புனிதம் கிட்டும் என்பது ஜதீகம்.

சரணம் சரணம் ஸ்ரீரங்கா !
திருவடி சரணம் ஸ்ரீரங்கா !

பாஞ்சராத்ர தீபம் !

கார்த்திகை தீபம் ஸ்பெஷல் ! 

 பாஞ்சராத்ர தீபம் !


இறைவழிபாட்டில் தீபங்களுக்கு எப்போதுமே முக்கியத்துவம் உண்டு. தீபங்களில் பல வகைகள் உள்ளன. தீப ஏற்றுவதிலும் பல முறைகள் பின்பற்றப் படுகின்றன.
தீபமேற்றும் முறைகள் பத்து: தரையில் வரிசையாக தீபங்கள் ஏற்றுதல். தரையில் கோலம் போட்டு வட்டமாக ஏற்றுதல். சித்திர தீபம்.மாலா தீபம். அடுக்கு தீபம். ஆகாச தீபம். ஜல தீபம் (நீரில் விளக்குகளை மிதக்க விடுதல்) நௌகா தீபம் (படகு போன்று செய்து பெரிய தீபமாக ஏற்றி நீரில் மிதக்க விடுதல்) கோபுர தீபம் (கோயில் கோபுரங்களின் மீது ஏற்றுதல்) ஸர்வ தீபம் (இல்லங்களில் முழுவதும் தீபங்கள் ஏற்றுதல்).

தீபங்கள் பதினாறு: தூபம், தீபம், அலங்கார தீபம், நாக தீபம், விருஷப தீபம், புருஷாமிருக தீபம், சூல தீபம், கமடதி (ஆமை) தீபம், கஜ (யானை) தீபம், வியாகர (புலி) தீபம், சிம்ஹ தீபம், துவஜ (கொடி) தீபம், மயூர (மயில்) தீபம், பூரண கும்ப தீபம் (ஐந்து தட்டு), நட்சத்திர தீபம், மேரு தீபம்.

விஷ்ணு கார்த்திகை: "பாஞ்சராத்ர தீபம்' என்ற பெயரில் விஷ்ணு கோயில்களில் கார்த்திகை தீபத்திருவிழா மூன்று நாட்கள் மிகச்சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. கார்த்திகை தீபத்தையொட்டி மூன்று நாள்களும் "சொக்கப்பனை' எரிக்கும் வழக்கம் உண்டு.

ஒருமுறை கலைமகளுக்கு தெரியாமல் பிரம்மன் யாகம் ஒன்றினை நடத்தினார். அதனால் கோபம் கொண்ட கலைமகள், பிரம்மனின் யாகத்தை அழிக்க ஓர் அரக்கனை ஏவினாள். அரக்கன் யாகத்தைத் தடுக்க உலகம் முழுவதும் இருள் சூழும்படி செய்தான். இதனால் பிரம்மனின் யாகத்திற்கு தடை ஏற்படும் நிலை ஏற்பட்டது. உடனே, பிரம்மன், மஹாவிஷ்ணுவை வேண்டினார். மஹாவிஷ்ணு ஜோதியாய் ஒளிர்ந்து உலகத்தில் சூழ்ந்த இருளை அகற்றினார். மஹாவிஷ்ணு ஒளிகொடுத்த இந்த நிகழ்ச்சி நடந்தது, "ஒரு கார்த்திகை மாதத்து கார்த்திகை நட்சத்திர தினத்தன்று' என்பதால் அதனைக் கொண்டாடும் வகையில் விளக்கேற்றி வைணவர்கள் கொண்டாடுகிறார்கள்.

தீபத்திருநாள் வாழ்த்துகள் !

திருமால் உடனே தானே ஒரு ஜோதிப் பிழம்பாக உருமாறி நின்றார்

கார்த்திகை தீபம் ஸ்பெஷல் !


வசிஸ்ரவஸ் ஒரு யாகத்தின் நிறைவில் தானம் கொடுத்துக்கொண்டிருந்தார். நசிகேதன் பல கேள்விகளை அவரிடம் கேட்டுக்கொண்டே இருந்தான். தந்தையே என்னை யாருக்காவது தானமாகத் தரப்போகிறீர்களா? ஆமாம். உன்னை எமனுக்குத் தரப்போகிறேன். எமனுலகம் சென்றான். ஊனுடலோடு எமதர்மனிடம் ஏராளமான கேள்விகளைக் கேட்டான். பல வரங்களையும் நீண்ட ஆயுளையும் பெற்றுத் திரும்பினான்.

பூலோகத்திலிருந்து எமனுலகு செல்லும் உயிர்கள் பல இருட்டில் பாதை தெரியாமல் தத்தளிப்பதைப் பார்த்தான் நசிகேதன். கார்த்திகை மாதத்தில் திருக்கார்த்திகைக்கு முன்பாக வரும் பரணி நட்சத்திரத்தன்று யார் வீடுகளில் விளக்கேற்றி வைக்கப்பட்டிருக்கிறதோ அந்த வீட்டைச் சேர்ந்தவர்களுக்கு வெளிச்சம் தெரியும். அது மட்டுமல்ல. கார்த்திகை தீபத் திருநாளன்று சொக்கப்பனை எரித்தால் அனைத்து உயிர்களுக்கும் வெளிச்சம் கிடைக்கும்.

அன்று முதல் பரணி தீபம் எங்கும் ஏற்றப்பட்டது. அதோடு, சக உயிர்களின் நன்மைக்காக சொக்கப்பனை கொளுத்தும் வழக்கமும் வந்தது. உலக உயிரினங்கள் அனைத்துக்காகவும் மோட்ச தீபம் ஏற்றும் தினம் இது. உலக நன்மைக்காக வேண்டிக்கொண்டு தீபம் ஏற்றி வணங்குவது நம் மரபு. கார்த்திகை என்றாலே ஒளி என்று பொருள். கார்த்திகை தீபத்துக்கு இன்னொரு காரணமும் உண்டு.

நான்முகன் தனது மனைவியான சரஸ்வதி தேவியை விட்டுவிட்டு தான் மட்டும் யாகம் ஒன்றை நடத்தினார். மனைவி இருக்கும்போது வைதிக காரியங்களைத் தனித்துச் செய்யக் கூடாது.

தனது கணவன் தன்னைப் புறக்கணித்ததை எண்ணி, கோபம் கொண்ட சரஸ்வதி, யாகத்துக்குத் தடையாக உலகெங்கும் இருளைப் பரவச் செய்தாள். யாகம் தடைபட்டது. நான்முகன் செய்வதறியாது திகைத்தார். தனது தந்தையான திருமாலிடம் சென்று முறையிட்டார். அன்று கார்த்திகை மாத பௌர்ணமி தினம்.

திருமால் உடனே தானே ஒரு ஜோதிப் பிழம்பாக உருமாறி நின்றார். அந்தப் பிரகாசத்தில் உலகமே ஒளிர்ந்தது. யாகம் நல்லபடி நிறைவேறியது. இந்தச் சம்பவம் நடந்தது காஞ்சிபுரத்தில் உள்ள தூப்புல் திருத்தலத்தில்.

இத்தலத்தில் விளக்கொளிப் பெருமாள் எனும் திருநாமத்தோடு தீபப்பிரகாசராய் சேவை சாதிக்கிறார்.

தீபத்திருநாள் நல்வாழ்த்துகள் !

திருவண்ணாமலையில் கார்த்திகை தீபம் ஏற்றும் முறை !

கார்த்திகை தீபம் ஸ்பெஷல் !

திருவண்ணாமலையில் கார்த்திகை தீபம் ஏற்றும் முறை !



திருக்கார்த்திகையன்று காலையில் ஏற்றப்படுவது பரணிதீபம். இத்தீபத்தை #அண்ணாமலையார் கருவறையில் ஏற்றுவர். பரம்பொருள் ஒன்று என்பதை காட்டுவதற்காக ஒரு பெரிய கற்பூரக் குவியலில் ஜோதி ஏற்றி தீபாராதனை செய்வர். அதிலிருந்து ஒரு மடக்கில் உள்ள நெய்த்திரியில் விளக்கு ஏற்றப்படும். அந்த தீபத்தை நந்திதேவரின் முன் காட்டி ஐந்து மடக்குகளில் நெய் விளக்கேற்றுவர். விநாயகர், முருகன், சிவன், அம்பிகை, சண்டிகேஸ்வரர் என்னும் பஞ்சமூர்த்திகளையும் இந்த ஐந்து தீபங்கள் குறிக்கும். முதலில் ஏற்றப்பட்ட நெய்தீபத்தை #உண்ணாமுலை அம்மன் சந்நிதிக்கு கொண்டு செல்வர். அங்கே ஐந்து மடக்குகளில் தீபம் ஏற்றுவர். இது தேவியின் பஞ்சசக்திகளைக் குறிக்கும். அதன்பின் எல்லா சந்நிதிகளிலும் தீபம் ஏற்றப்படும். பரணி நட்சத்திர வேளையில் ஏற்றுவதால் இதை பரணிதீபம் என்பர். இந்த தீபங்கள் அனைத்தும் மாலையில் ஒன்று சேர்க்கப்படும். உலகம் எல்லாம் பரம்பொருளின் மாறுபட்ட கோலங்களே. அவை அனைத்தும் மீண்டும் பரம்பொருளில் ஐக்கியமாகிவிடும் என்பதை உணர்த்தும் விதத்தில் இதைச் செய்வர். மாலையில் பின்னர் பஞ்சமூர்த்திகளும், அர்த்தநாரீஸ்வரரும் கோயிலுக்குள் எழுந்தருள்வர். இவர்களுக்கு தீபாரதனை செய்யும் போது மலையில் தீபம் ஏற்றப்படும். அமுதக் கடல் அண்ணாமலை !#தீபங்கள் #ஒளிவீசும் கார்த்திகை தீபத்தின் நோக்கம் பாவம் போக்குதல் என்பது தான்.
'அரஹர' என்றால் 'பாவங்கள் போய்விட்டது' என்று பொருள். அதனால் தான் #அண்ணாமலையாருக்கு 'அரோஹரா' என்ற சொல்லானது மந்திரமாக கூறப்படுகிறது.
 #அண்ணாமலையாருக்கு அரோகரா என்ற ஒலியை கேட்கவும் தீபச்சுடர் ஒளியை காணவும்.

ஓம் நமசிவாய !!!

இறைவனை ஜோதி வடிவாக வழிபடுவது தொன்று தொட்டு இருந்து வரும் மரபு ஆகும்

கார்த்திகை தீபம் ஸ்பெஷல் !
 


இறைவனை ஜோதி வடிவாக வழிபடுவது தொன்று தொட்டு இருந்து வரும் மரபு ஆகும்.

நினைத்தால் முக்தி தரும் திருவண்ணாமலையில் சிவபெருமான் ஜோதி வடிவாக தோன்றினார். இதை நினைவு கூரும் விதத்தில் ஆண்டுதோறும் கார்த்திகை தீபத்தின் போது, திருவண்ணாமலையில் 2,668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படுகின்றது.

தீப வழிபாடு என்பது நீண்ட நெடிய காலமாக நடைமுறையில் இருந்து வருகிறது. வட நாட்டில் தீப வழிபாடு என்பது ‘தீபாவளி’ என்றும், தெற்கே ‘கார்த்திகை தீபம்’ என்றும் கொண்டாடப்படுகிறது.
 
தீபத்தின் நடுவில் மகாலட்சுமியும், ஒளியில் சரஸ்வதியும், வெப்பத்தில் பார்வதி தேவியும் எழுந்தருள்வதாக ஐதீகம். எனவே தீபம் ஏற்றி வழிபடுவதன் மூலம் முப்பெருந்தேவியரின் திருவருளையும் ஒருங்கே பெறலாம்.

அடிமுடி காணாத வரலாறு!

படைக்கும் கடவுளாகிய பிரம்மாவுக்கும், காத்தல் கடவுளாகிய திருமாலுக்கும் இடையே ‘யார் பெரியவர்?’ என்ற போட்டி ஏற்பட்டது. அப்போது சிவபெருமான் ஆதியும், அந்தமும் இல்லாத அருட்பெருஞ்ஜோதியாய் தோன்றினார். ‘இருவரில் யார் எனது அடியையோ (பாதம்), முடியையோ காண்கிறீர்களோ அவர்களே பெரியவர்’ எனக் கூறினார். 

திருமால், வராக உருவம் கொண்டு திருவடிகளை காணச் சென்றார். பிரம்மா அன்னப்பறவை உருக்கொண்டு திருமுடியை காண பறந்து சென்றார். ஆனால் இருவரும் அடியையோ, முடியையோ காணமுடியாமல், அகங்காரங்கள் அழிய பெற்றவர்களாக சிவ பரம்பொருளே உலகின் முழு முதற் பரம்பொருள் என்பதை உணர்ந்துகொண்டனர். தங்களது பிழையை பொறுத்து அருளுமாறு சிவ பெருமானை பிரார்த்தனை செய்தனர். 

உடனே சிவன், சிவலிங்க திரு உருவத்தோடு ஜோதிப்பிழம்பில் இருந்து வெளிப்பட்டார். அப்போது திருமால், பிரம்மா இருவரும் சிவபெருமானை வழிபட்டு உண்மை ஞானம் பெற்றனர். ஜோதிப்பிழம்பு அருணாசலமானது. அதில் இருந்து தோன்றிய சிவலிங்கம் அருணாசலேசுவரர் ஆனார். இந்த நிகழ்ச்சியை நினைவுகூரும் விதத்தில் தான், கார்த்திகை மாதத்தில் கார்த்திகை தீபம் ஏற்றப்படுகிறது. மாதந்தோறும் கார்த்திகை விரத நாள் வருகிறது. கார்த்திகை மாதம் வரும் கார்த்திகை தினத்தை ‘திருக் கார்த்திகை’ என்பர். 

விரதம் இருப்பது எப்படி?

கார்த்திகை முதல் நாளன்று பரணி நட்சத்திர நாளில், பகலில் ஒருவேளை மட்டும் உணவருந்த வேண்டும். கார்த்திகைஅன்று அதிகாலையில் நீராடி இறைவனை வழிபட்டு நீர் மட்டும் அருந்தி இரவு கோவிலுக்கு சென்று தரிசனம் செய்ய வேண்டும். மறுநாள் அதிகாலையில் காலைக்கடன் களை முடித்து நீராடி பாலினை அருந்தி விரதத்தை நிறைவு செய்ய வேண்டும். உமாதேவிக்கு சிவபெருமான் தனது இடப்பாகத்தினை கொடுத்து ஆட்கொண்டதும் இந்நாளில்தான். அன்று ‘‘ஓம் நமச்சிவாய வாழ்க’’ என்று சொல்வது தீராத வினைகளை தீர்த்து வைக்கும். நீங்காத செல்வத்தையும் வழங்கும். நீடித்த ஆயுளை தரும். 

கார்த்திகை விரதத்தை தொடர்ந்து கடைப்பிடித்தால் சுகபோக வாழ்வு வாழலாம். இந்த விரதத்தை 12 ஆண்டுகள் கடைப்பிடித்து நாரத மகரிஷி சப்த ரிஷிகளுக்கு மேலான பதவியை அடைந்தார். 

வீடுகளில் மாலை பவுர்ணமி நிலவு தோன்றும் நேரத்தில் வீட்டு வாசலில் வாழைக்கன்று நட்டு வைத்து அதன்மேல் தீபம் ஏற்றியும், வீடுகளுக்குள் வெளிச்சம் தரும் அகல் விளக்குகளில் தீபம் ஏற்றியும் அழகுபடுத்திட வேண்டும். இதைக் கார்த்திகை விளக்கீடு என்றும், சர்வலாய தீபம் என்றும் அழைக்கின்றோம். 

கார்த்திகை மாதம் முழுவதும் மாலை வீட்டு வாசலில் விளக்கேற்றி வைக்கின்ற பழக்கம் உண்டு. கார்த்திகையன்று முருகன் ஆலயங்களில் மாவிளக்கு போட்டு வழிபாடு செய்வர். ஆலய முன்புறத்தில் காய்ந்த ஓலை, மட்டை, இலைகளால் பனைவடிவில் கட்டப்பட்ட சொக்கப்பனை ஏற்றி ஜோதி வடிவாகக் காட்சியளிக்க செய்வர்.
சிவபெருமான் ஜோதிப்பிழம்பாகத் தோன்றிய காட்சியை நினைவு கூர்ந்து தரிசனம் செய்வர்.

சொக்கப்பனை கொளுத்துவது ஏன்?

திருக்கார்த்திகை தினத்தன்று சிவாலயங்களிலும், முருகன் கோவில்களிலும் சொக்கப்பனை கொளுத்தப்படுகிறது. கோவிலுக்கு அருகில் பனை மரத்தை நாட்டி அதில் பனை ஓலைகளையும், வெடிகளையும் இணைத்து கட்டுகின்றனர். மாலையில் சொக்கப்பனை கொளுத்தப்படுகிறது. சில கோவில்களில் பனை ஓலைகளை ஒரு சிறு கூண்டைப்போல கட்டி அதை எரிக்கின்றனர். ஆணவம் எரிகிறது. கூடவே அஞ்ஞானமும் எரிகிறது. இறைவன் ஜோதி வடிவாக காட்சி தருகிறான்.

சிவபெருமான் திரிபுரங்களை எரித்த நாள் திருக்கார்த்திகை நாளாகும். சிவன் எரித்த பாவனையை வெளிப்படுத்துவதற்காக சொக்கப்பனை கொளுத்து கின்றனர். மேலும் அடி, முடி தேடிய விஷ்ணுவுக்கும், பிரம்மனுக்கும், ஆதி, அந்தம் இல்லாத அருட்பெரும் ஜோதி வடிவமாக சிவபெருமான் காட்சி கொடுத்தார். நெருப்புக்கு முதலும், முடிவும் கிடையாது. சிவபெருமான் ஜோதி வடிவாக காட்சி கொடுத்ததை நினைவு கூரும் விதத்திலும் சொக்கப்பனை கொளுத்துகின்றனர்.

விளக்கேற்ற நல்ல நேரம்

கார்த்திகை தீபம் ஏற்றி வழிபட்டால் நினைத்த காரியம் வெற்றி பெறும். தினமும் அதிகாலை பிரம்ம முகூர்த்த வேளையில் காலை 4.30 மணி முதல் 6 மணிவரை விளக்கேற்றினால் புண்ணியம் சேரும். மாலை பிரதோஷ வேளையில் 4.30 மணி முதல் 6 மணி வரை தீபம் ஏற்றினால் கல்வி அபிவிருத்தியாகும். திருமண தடை விலகும். வீட்டில் மாலை 6.30 மணிக்கு அனைவரும் அவசியம் விளக்கேற்ற வேண்டும். விளக்கை குளிர்விக்கும் போது கையால் அணைக்கக் கூடாது. பூவினால் குளிர்விக்கலாம்.

அகல் விளக்கில் நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி அதன்பின்பு 5 நூல் கொண்ட நூல்திரி போட்டு திரியின் நுனியில் சிறிது கற்பூரம் வைத்து விளக்கு ஏற்ற வேண்டும். விளக்கு தீபம் ஏற்றி வழிபட்டால் செல்வ செழிப்பு உண்டாகும், மகிழ்ச்சி நிலவும், நல்ல வேலை கிடைக்கும். குழந்தை பாக்கியம், மனதுக்கு ஏற்ற வரன் அமையும் மற்றும் சகலவித செல்வங்களும் கிடைத்து வாழ்வில் வளம் பெருகும்.

தீபத்திருநாள் நல்வாழ்த்துகள் !